Friday, June 17, 2016

ருத்ராட்சம்

 
ருத்ராட்சம் மிக விசேஷமானது. இதை சைவர்கள் மட்டுமல்லாமல் வைணவர்களும் மற்றவர்களும் கூட இதன் நன்மைகள் கருதி அணிந்து கொள்கிறார்கள். சீக்கியர்கள், புத்த மதத்தினர்கள் கூட ருத்ராட்ச ஜபமாலைகளைத் தங்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.
ருத்ரன்+ அட்சம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண், அல்லது சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று பொருள் கூறுகிறார்கள்.
ருத்ராட்சம் உருவான விதம் குறித்து மூன்று விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களை வருத்திக்கொண்டிருந்த திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது,  சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என்று ஒரு கதை சொல்கிறது.
ஒரு சமயம்,  உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்த சிவபெருமான்  தவம் முடிந்து கண் விழித்த சமயம்,  கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.
நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.
ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவிபாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன.
ருத்ராட்சத்தின் வேதியியல் பெயர் எலெயோகார்பஸ் கேனிட்ரஸ் ராக்ஸ்ப் (Elaeocarpus ganitrus Roxb). நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் ருத்ராட்ச மரங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த மரங்கள் விளைகின்றன. இந்த வகை மரங்களில் சுமார் 36 உட்பிரிவுகள் இருந்தாலும் அவற்றில் மூன்று பிரிவுகள் மட்டுமே ருத்ராட்சமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகிய நிறங்களில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கின்றன.  ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு. அவற்றை முகங்கள் என்று சொல்கிறார்கள்.  ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும், ஐந்து கோடுகள்  இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுகிறார்கள். அதிகபட்ச முகங்கள் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. பெரும்பாலானோர் 21 முகங்கள் வரை ருத்ராட்சத்தில் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களைச் சொன்னாலும் பக்தியுடன் அணிந்தால் எத்தனை முகம் உள்ள ருத்ராட்சமே ஆனாலும் நல்ல பலனையே கொடுக்கும்.
ருத்ராட்சத்திற்கு ஆற்றல் உள்ளது என்று நம் முன்னோர்கள் அனுபவம் மூலமாகக் கூறி வந்தனர். அது இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட இரண்டு முக்கிய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்ப்போம்.
வாரணாசியில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் டாக்டர் சுபாஷ் ராய் தலைமையில் உயிர் வேதியியல் துறை, மனநோய் மருத்துவத் துறை,  பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய  நான்கு துறை மருத்துவ அறிஞர்களும் இணைந்து ருத்ராட்சம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்கள் ருத்ராட்சத்திற்கு மூன்று சிறப்புத் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர். அவை-

*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
*காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Paramagnetic)
*சக்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மை (Inductive)

இத்தன்மைகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு  வாழ்க்கையை நோக்கும் தன்மை,  தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியவற்றில் முன்னேற்றம் கிடைக்கின்றது. மேலும் ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர். மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.
அதே போல டாக்டர் ஜெயந்த குமார் சர்மா என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் கல்கத்தா மற்றும் பெல்காமைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ருத்ராட்சத்தினால் ஏற்படும் நல்ல விளைவுகளை ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள். ரத்த அழுத்தம் மட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மிதமிஞ்சிய மன உளைச்சல் குறைக்கப்படுகிறது என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது.
மேலும் ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.
ருத்ராட்சம் மிகுந்த பக்தியுடன் அணியப்படும் போது ஒருவருக்கு சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது அணிபவர்களின் ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் இந்த நல்ல  விளைவுகளை உணர்ந்திருந்த முன்னோர்கள்  இம்மணிகள் தெய்வீகமானவை என்றும் இறைவனால் அனுப்பப்பட்டவை என்றும் கருதியதில் வியப்பில்லை.
உண்மையான ருத்ராட்சமணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அவை தங்களுக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்ததாக நம்புகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ருத்ராட்சம் நமக்கு உடல் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தையும் அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சத்தை அணிந்து உண்மையாக ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் தியான காலத்தில் சீக்கிரமே ஆல்பா மன நிலைக்கு (Alpha state of mind) செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள்.


ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். அதனால் தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
பெண்கள் ருத்ராட்சம் அணிவது கூடாது என்று ஒரு கருத்து இருந்தாலும் அதற்கு சாஸ்திரங்களிலோ, ஆகமங்களிலோ ஆதாரம் இல்லை. தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டிருப்பதாக  குறிப்பிடப்படுகின்றது. எனவே இறை சிந்தனைகளில் ஈடுபாடுள்ள யாவருமே அணியத் தகுந்தது ருத்ராட்சம் என்று சொல்லலாம்.
ருத்ராட்சம் அணிபவர் இறை சக்தியை தன்னிடம் வைத்துள்ளோம் என்ற பிரக்ஞையுடன் முறையான வாழ்வை நடத்தினால் அந்த இறை சக்தி அவர்களுக்கு ஆரோக்கியம், மன அமைதி அளிப்பதுடன் அவர்களை அனைத்து சூழல்களிலும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்லும் என்பது நிச்சயம்!

No comments:

Post a Comment