Tuesday, June 28, 2016

சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்





திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டுஎன வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.
பெருமாள் கையை அலங்கரிப்பவர்
சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.
நவகிரக தோஷம் நீங்க
சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நமஎன்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி
சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.
கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.
பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
நமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள். அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும். வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம - தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-


சூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான - பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் - கதை - சங்கு - தாமரைப்பூ - உலக்கை - பாசம் - அங்குசம் - தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.


அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-


சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.


சுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.


ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும்.


முழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும். ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான். எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.


சத்ரு உபத்திரவம் நீங்க.


வழக்கமான வகையில் நெய்யை அக்னியில் சேர்த்து இந்த ஹேமத்தைச் செய்யவேண்டும். திங்கட்கிழமையில் ஆரம்பித்து ஒரு மண்டலம் வரை (48 நாட்கள்) இந்த ஹோமம் செய்ய வேண்டும்.


பூதம், பிசாசு குறித்த பயம் விலக:


நாயுருவி சமித்தை நெய்யில் முக்கி எடுத்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும்.


மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக: கரு நொச்சி, இருமுள், நீல ஊமத்தம்பூ, வெள்ளை பிளாச்சு இவற்றைக் கொண்டு மூவாயிரம் தடவை ஹோமம் செய்ய வேண்டும். ஒரு மண்டல காலம் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறுவார்கள்.


ஏவல் எடுப்பதற்கு: நாயுருவி, சர்க்கரை, நெய் இவற்றைக் கொண்டு 108 தடவை ஹோமம் செய்ய வேண்டும். எந்த ஏவல் ஏவப்பட்டிருந்தாலும் அது சட்டென விலகி விடும். ஏவலை மிகச் சரியாகக் கணித்து இது செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் பின்விளைவு தாக்கும்.


ஏவி விடப்பட்ட அதிபயங்கர பூதங்கள் ஓடிப் போவதற்கு: நெய், நாயுருவி, அரிசி, கடுகு, எள், பால் பாயாசம், பஞ்சகவ்யம் இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கொண்டு 126 தடவை ஹோமம் செய்ய வேண்டும்.


தீர்க்க ஆயுசு கிடைக்க: அறுகம்புல்லை பசும்பாலில் தோய்த்து எடுத்து, அதை அப்படியே அக்னியில் சேர்ப்பிக்கவேண்டும். இப்படி பத்தாயிரம் முறை ஹோமத்தில் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால், பூரண ஆயுள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க: தாமரைப்பூவை நெய்யில் தோய்த்து எடுத்து, அதை அப்படியே அக்னியில் சேர்க்க வேண்டும். இப்படி பத்தாயிரம் முறை ஹோமத்தில் சேர்க்கவேண்டும். இதனால் செல்வம் பல வாய்க்கப்பெறுவர்.


எளிதில் கிரகிக்கும் ஆற்றல்: ஷமதப்பூவை (ஒரு வகையான பூ) நெய்யில் தோய்த்து எடுத்து, அக்னிக்கு சமர்ப்பித்து பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும்.


ஆபத்து வராமல் தடுக்க: கோலிக்குண்டு மாதிரி உருண்டை யாக இருக்கக்கூடிய குக்குலு என்ற மருந்துப் பொருளை அக்னியில் சமர்ப் பித்து ஆயிரத்தெட்டு தடவை ஹோமம் செய்யவேண்டும்.கறவை மாடு அதிக அளவில் பால் கறக்க: கிண்ணம் போல் மடிக்கப்பட்டதில் இருந்து, மாவிலையில் நெய் எடுத்து, அதை அக்னியில் அப்படியே சேர்க்கவேண்டும். இப்படி பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும்.


கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்கு தெரியாத நோய்கள் நீங்குவதற்கு: பஞ்சகவ்யம் உருவாக்கி நாயுருவியால் பத்தாயிரம் தடவை ஹோமம் செய்யவேண்டும். இந்த ஹோமம் முடிந்ததும் ஹோமத்தின் சாம்பலை தயிருடன் கலந்து வீட்டைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் ஆகாயம், பூமி ஆகிய இரண்டிலும் சேர்த்து வீசி எறிய வேண்டும்.


சுகப் பிரசவம் ஆவதற்கு: கலசத்தில் நீரை நிரப்பி, சுதர்சனரை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்தக்கலச நீரைக்கொண்டு தொடர்ந்து ஏழு நாட்களுக்கு பிரசவம் ஆகவேண்டிய பெண்ணை நீராட்ட வேண்டும்.


கோபம் வராமல் இருப்பதற்கு ஹோமம்... ஆலமர சமித்தைக் கொண்டு சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும். பால், நெய், சர்க்கரைப் பொங்கல் இவற்றை இந்த சமித்து மூலம் எடுத்து அக்னியில் விட்டு ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் தனித் தனியாக நான்காயிரம் தடவை செய்யவேண்டும்.


இந்த ஹோமம் செய்வதன் மூலம் கோபத்தை முற்றிலுமாகக் குறைக்கலாம். குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் சுதர்சன ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.